2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை சர்வாதிகாரத்துடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூர்மையான பதிலளித்தார்.
“வருமானச் சட்டமூலம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தலைமையில் புதிய பிரத்தியேக பொலிஸ் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது,” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அவரது கூற்றில் மேலும், “சிலர் ‘ஹிட்லர் திரும்பி வந்துவிட்டார்’ என்கிறார்கள். ஹிட்லரை தோற்கடிக்க ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்தன. அதைப் பார்த்தீர்களா? நீங்கள் ரஷ்யாவா? நீங்கள் அமெரிக்காவா?” என்று எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்.

வரலாற்று நிகழ்வை எடுத்துரைத்த அவர், “ஹிட்லரை எதிர்த்து ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்தது உலக வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. ஆனால் அதை இன்றைய அரசியல் சூழலுடன் ஒப்பிடுவது முற்றிலும் அபத்தம்,” என்றார்.
மேலும், சர்வாதிகாரம் குறித்த குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்த ஜனாதிபதி திஸாநாயக்க, “சட்டம் எவருக்கும் விலக்கல்ல. யார் மக்களுக்குத் துரோகம் செய்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இது பயமோ பாரபட்சமோ கொண்ட நடவடிக்கை அல்ல. நாங்கள் பின்வாங்க மாட்டோம்,” என உறுதியாகக் கூறினார்.








