மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள் பவுசரொன்று இன்று (14) திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று கல்முனையில் இருந்து திருகோணமலைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக சென்ற வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து, பவுசர் வீதியை விட்டு விலக விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று அதிகாலை 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சம்பவத்தில் வீதியை விட்டு விலகிய பவுசர் பேருந்து தரிப்பு நிலையம், மின்சார தூண் மற்றும் வீடொன்றின் மதில் மற்றும் நுழைவாயில் என்பனவற்றில் தொடர்ச்சியாக மோதுண்டு சேதப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதுடன், கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கு சுமார் 2 மணித்தியாலம் தடங்கல் ஏற்பட்டது.
அதேசமயம் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன்,
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிசார் வீதி போக்குவரத்தை சீராக்கியதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.