நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இந்தத் தொடர் மழையினால், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக, அவ்வழியாகப் பயணிக்கும் சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மலைச்சரிவுகள் காணப்படும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதையோ அல்லது தேவையின்றித் தங்குவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று மாலை ஹட்டன் – குடாக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. அத்துடன், மண்சரிவின் தாக்கத்தால் தொலைபேசி கம்பங்களும் சேதமடைந்தன.
சம்பவத்தைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் இன்று காலை உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, வீதியில் குவிந்திருந்த மண்ணை அகற்றினர். இதனால் தற்போது அப்பகுதியில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
எனினும், தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் மண்சரிவு அபாயம் நீடிக்கிறது. எனவே, வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாகச் செயல்படுமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.







