ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான பெண்கள் மத்தியஸ்தர்கள் குழாமில் இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தும் இருவர் இடம்பிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு முற்றுமுழுதான பெண்கள் மத்தியஸ்தர்கள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
ஒன்பதாவது மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாத்தை முன்னிட்டு 13 பெண் மத்தியஸ்தர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு இலங்கையர்கள் இடம்பெறுகின்றமை நாட்டிற்கு புகழையும் பெருமையையும் கொடுத்துள்ளது என இலங்கை கிரிக்கட் சங்கம் அறிவித்துள்ளது.
இதில் மிச்செல் பெரெய்ரா போட்டி தீர்ப்பாளராகவும், நிமாலி பெரேரா கள மத்தியஸ்தராகவும் செயற்படவுள்ளனர்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான ஜெரலீன் மிச்செல் பெரேய்ராவும் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதான நிமாலி தினுஷானி பெரேராவும் முன்னாள் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் ஆவர்.

மிச்செல் பெரேய்ரா 2 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 10 மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் போட்டி தீர்ப்பாளராக செயற்பட்டுள்ளார்.
மகளிர் உலகக் கிண்ணப் போட்டிக்கு தீர்ப்பளாராக மிச்செல் பெரெய்ரா தெரிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிமாலி பெரேரா 2 உலகக் கிண்ணப் போட்டிகள் உட்பட 37 போட்டிகளில் கள மத்தியஸ்தராகவும் 7 போட்டிகளில் தொலைக்காட்சி மத்தியஸ்தராகவும் செயற்பட்டுள்ளார்.








