‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்பவும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் விசேட அவசர நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதுடன், களமட்டத்தில் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விலங்குகளுக்கான தீவனம் வழங்குதல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், விலங்கு நலன் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீளமைத்தல், உணவு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாட்டின் மூலம் உயர்தர பால் பசுக்களை உருவாக்குதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீள நிலைநிறுத்துவதோடு, உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்து நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.








