யானைகள் இறப்பு அதிகரித்து வருவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான கவலையை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் உலகிலேயே அதிக அளவில் யானைகள் இறப்பு நிகழ்ந்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சிறுத்தைகள் மற்றும் பிற பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் தொடர்ந்து கொல்லப்படுவதையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் வனவிலங்குகள் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பொருளாதாரத்திற்கு, குறிப்பாக சுற்றுலாவிற்கு இன்றியமையாதது என்பதையும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை அவசரமாக திருத்த வேண்டும் என்றும், விரிவான சட்ட சீர்திருத்தங்களுக்கான தமது சொந்த திட்டங்களை முன்வைப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்தது.
இதற்கிடையில், பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை சட்டவிரோதமாக கொல்வதைத் தடுக்கும் வகையில், அபராதம் மற்றும் தண்டனைகளை அதிகரிக்க விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் குறுகிய கால திருத்தங்களை செயல்படுத்துமாறு அந்த சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது.








