விளையாட்டு அமைச்சிற்காக வரிவிலக்கு சலுகையில் கொண்டு வரப்பட்ட பேருந்து, ஷிராந்தி ராஜபக்ஷவின் சொந்தமான கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை குற்றப்புலனாய்வு துறை (CID) விசாரிக்க உள்ளதாக தி சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
செய்தி அறிக்கையின்படி, அரசுக்கு நிதிநஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்குவந்ததை அடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு வழக்கை மீண்டும் திறந்துள்ளது. இதற்கமைவாக ஜனாதிபதி செயலாளரகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளரையும் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை, ஷிராந்தி ராஜபக்ஷவின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘சிரிலியா’ திட்டத்துடன் தொடர்புடையதாகும். சிரிலியா கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஏழு முறைகேடுகள் குறித்த அறிக்கைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்பு மாலிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அவற்றில் ஆறு வழக்குகள், போதுமான ஆதாரம் இல்லை என்ற சட்டமா அதிபர் துறையின் ஆலோசனையின் பேரில் மூடப்பட்டன.
எனினும், பேருந்து தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் புதிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளனர். இதன்பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாணைகளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








