அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெயை கொண்டு வந்த நபர் ஒருவரை, இன்று (15) பகலில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1,900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த கன்டர் ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஈ. உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே, காந்தி பூங்கா முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மூன்று பரல்களில் நிரப்பப்பட்ட தேங்காய் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதகர்கள் எம். தேவநேசன் மற்றும் என். விமலசேன ஆகியோர் இதனை தடுத்து, வாகனத்துடன் சந்தேகநபரையும் பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த எண்ணெய் மனிதர் பயன்பாட்டுக்கு பொருத்தமற்றது என உறுதி செய்யப்பட்டது. மேலும், அனுராதபுரம் பகுதியிலுள்ள பெரிய உல்லாச விடுதிகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து, அதில் கொத்தமல்லி மற்றும் புதிய தேங்காய் எண்ணெயை கலக்கி, புதிய எண்ணெய் போல மாற்றி விற்பனை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.














