நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளில் பாறைகள் விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இந்நிலையில், 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்பபடி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
வளிமண்டல தளம்பல் நிலையினால் நாடு முழுவதிலும் பல நாட்களாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாகொடை பகுதி வழியாக வீசிய பலத்த காற்றினால் மாபலகம – காலி பிரதான வீதியில் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.








