வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போது நாடு பாரிய கலாசார சீரழிவை எதிர்நோக்கி வருவதாக அஸ்கிரி தரப்பின் அனுநாயக்கர், வணக்கத்திற்குரிய வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த உரையில், நாட்டில் நிலவும் கலாசார சீரழிவு மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் மௌனம் காக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழலில் கலாசாரம், வரலாறு, சாசனம் மற்றும் மகா சங்கத்திற்கு வழங்கப்படும் கவனமும் மரியாதையும் குறித்து சமூகத்தில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் உருவாகியுள்ள சவால்களுக்கு மத்தியில் பௌத்த பிக்குகள் மௌனமாக இருந்தால், அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு வேறு யாரும் இல்லை என்றும், எனவே பிக்குகள் இந்நேரத்தில் முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனுநாயக்கர் தெரிவித்தார்.

மேலும், எவ்வித மிரட்டல்களுக்கும் அல்லது அச்சுறுத்தல்களுக்கும் பிக்குகள் அஞ்சத் தேவையில்லை எனக் கூறிய அவர், “தேவதத்தர்கள் இருந்த காரணத்தினாலேயே புத்தரின் பண்புகள் மேலும் அழகாக வெளிப்பட்டன” என எடுத்துக்காட்டினார்.
இந்த பூமி எமது வேர்களோடு தொடர்புடைய உன்னதமான புண்ணிய பூமி எனக் குறிப்பிட்ட அவர், இந்நாட்டின் கலாசாரம், கலை, வரலாறு மற்றும் சாசனத்திற்கு இன்று வழங்கப்படும் இடம் குறித்து நாம் எவ்வளவு திருப்தியடைய முடியும் என்ற கேள்வி அனைவரிடமும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த உரை, மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் முன்னாள் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால தேரரின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்றது. இதன் போது நூறு பிக்குகளுக்கு ‘சங்ககத தக்ஷிணா’ வழங்கப்பட்டதுடன், தற்போதைய விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் எழுதிய நூலொன்றும் வெளியிடப்பட்டது.








