சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவிதப் பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய உத்தரவுக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியுமான பிரீத்தி இனோகா ரணசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த உத்தரவு முதற்கட்டமாக ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுகள், நன்னடத்தை திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஊழியர்களுக்குப் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் கைரேகையை அடிப்படையாகக் கொண்ட தரவுத்தளம் மூலம் இந்தத் தடை அமுல்படுத்தப்படும் என பிரீத்தி இனோகா கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில், பத்தாயிரத்து 455 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவற்றில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக 545 சம்பவங்களும், பாரிய பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 231 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன், 38 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும், சிறுவர் திருமணங்கள் ஒன்பதும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.








