மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான அவசர கால வசதிகளை மேற்கொள்வதற்காகத் தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக இலங்கையர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் மோதல் நிலைமை நிலவியபோதிலும், இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதில் எவ்விதத் தடைகளும் இல்லை எனவும், வெளியேற்ற நடவடிக்கைகள் வழமைபோல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்துப் பணியகம் மற்றும் தூதரகங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும், அவசரத் தேவைகளுக்காகத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








