மட்டக்களப்பு பாசிக்குடாகடலில் நீராடச்சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப்பயணியொருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று பத்தாம் திகதி இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
ரஷ்ய நாட்டைச்சேர்ந்த அறுபத்து ஐந்து வயதுடைய கரிசன் ஓ என்பவரே; இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், குறித்த நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட குறித்தநபர், சம்பவதினமான இன்று காலை பாசிக்குடா கடலில் மனைவியுடன் நீராட சென்றுள்ளார்.

தன்னுடன் நீராடிக்கொண்டிருந்த கணவர் நீரில் காணாமல் போன நிலையில், மனைவி அவலக் குரல் எழுப்பியதை தொடர்ந்து, கடற்படை, பொலிஸ் உயிர்பாதுகாப்பு சுழியோடிகள் மற்றும் பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அவர் மீட்கப்பட்டு, உயிர்காப்பு மீட்பு பிரிவினரால் முதலுதவிகள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.