ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பிணைக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், 15 மாதப் போரை ஆரம்ப ஆறு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, காஸாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.

காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தச் சூழலில், போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.