வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 66 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம், பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரை இணையவழி வங்கிச் சேவை ஊடாக பணத்தை வைப்பிலிடுமாறு சந்தேகநபர் நம்ப வைத்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதன்படி, அம்பிளாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 3ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, இந்த மோசடி சம்பவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து மொத்தமாக 6,644,000 ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.








