குழந்தைகளின் பசியை ஒழித்து, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ENOUGH Campaign” அமைப்பின் விழிப்புணர்வு ஊர்வலமும் பரிசளிப்பு விழாவும் இன்று (05) மூதூரில் நடைபெற்றது.
“எந்தவொரு குழந்தையும் பசியால் பாதிக்கப்படக் கூடாது” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, கல்வி, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தில் பசியின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு சத்தான உணவு, அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதற்காக குடும்பங்கள், சமூகங்கள், அரசாங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மூதூர் பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம், பிரதான வீதி வழியாகச் சென்று மூதூர் கலாசார மண்டபத்தை வந்தடைந்தது. இதில் பிரதேச செயலக ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குழந்தைகளுக்கான சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன் அதன் பணிப்பாளர் வி. ஜே. அருன்ராஜ் தலைமையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எல். சிராஜ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி என். எம். கஸ்ஸாலி, பிரதேச சபை உதவி தவிசாளர் பி. டி. பைஸர் உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
குழந்தைகளுக்கு போதுமான சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சிறந்த சுகாதாரம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதார வசதிகளை உறுதிப்படுத்துவதன் மூலம் பசியற்ற எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற செய்தியை இந்த விழிப்புணர்வு நிகழ்வு வலியுறுத்தியது.








