2025 ஆண்டின் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் பொங்கல் விழாவும், புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் இரத்ததான நிகழ்வு என்பன நேற்று (01) நடைபெற்றது.
வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்தின் கமநல அமைப்புக்களின் தலைவர் எம்.எல்.எம்.சித்திக் தலைமையில், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயக்காந்தனின் வழிகாட்டலில் இவ் பொங்கல் விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
பின்னர் கலாச்சார பாரம்பரிய முறையில் கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கமநலசேவை உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கமநல கேந்திர வளாகத்தில் சர்வமத குருமார்களின் ஆசியுடன் பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கமநல சேவை நிலையத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் நினவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதேபோன்று குறித்த கமநல சேவை நிலையத்தில் சிறந்த சேவையாற்றிச் சென்ற உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
ஓய்வு பெற்றுச் சென்ற கமல அபிவிருத்தி உத்தியோகத்தர் இருவர் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும், நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேதசமயம் ”உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் இரத்த தான முகாமும் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கி.ஜெகன்நாத் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவிப்பணிப்பாளர் கவந்திசன்,பிராந்திய பொறியியலாளர் ம.திவாஸ்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை பெரும்பாக உத்தியோகத்தர் ஜனாப் பாயிஸ், கிரான் வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எ.ரசீட், கரடியனாறு ஏறாவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.தர்ஸ்குமார், மட்டக்களப்பு கமக்கார அமைப்புக்களின் தலைவர் ச.சந்திரமோகன், மற்றும் வாகநேரி திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் சி.சண்முகநாதன் ஆகியோர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.