முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரக்கெட்டிய இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததால், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய அங்கத்துவ நிறுவனத்தை பிரதிவாதியாக இணைக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மனுவின்படி, 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெற்ற திருமண விழாவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் ரூ. 2,682,246.57 ஆகும். அக்காலப்பகுதியில் குறித்த வீட்டிற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு மின்விளக்குகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அமைவாக மின்சாரத்தை வழங்குமாறும், அதற்கான கட்டணத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் செலுத்துவர் என்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அக்கட்டணம் செலுத்தப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண நுகர்வோரின் குறைந்த தொகை நிலுவைக்கே மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில், இவ்வளவு பெரிய நிலுவைத் தொகை இருந்தும் வீரக்கெட்டிய இல்லத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படாதது சட்டத்தின் முன் சமத்துவத்தை மீறுவதாக மனுதாரர் வாதிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முன்னர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.








