புதிய இணைப்பு
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்று, நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து, நேற்று (23) இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்று இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதால், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50,000 மீனவர்களும், மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்ததுடன் தினசரி அரசுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை சிறைபிடித்து செல்வதால் சினிமாவில் அத்திப்பட்டி என்ற கிராம் காணாமல் போனதை போல் ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகம் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் இணைப்பு
இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்
இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (24) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
மன்னார் கடற்பரப்பில் நேற்று அதிகாலை 32 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

நேற்று (23) நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுத்து படகுகளை மீட்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (24) முதல் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.