சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான சருமத்தை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய பால்மா டின்களுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரும் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மலேசியாவிலிருந்து இன்றைய தினம் காலை 09.17 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து சருமத்தை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய பால்மா டின்கள் 179 கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியின்றி இந்த பால்மா டின்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.