அதிக வாகன நெரிசல் நிலவும் நகர்ப்புறங்கள் மற்றும் போக்குவரத்து தடங்கல்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் அவசர மருத்துவ சேவையை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையை அறிமுகப்படுத்த 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.
அம்புலன்ஸ் சம்பவ இடத்தை வந்தடைவதற்கு முன்னரே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதே இந்த புதிய சேவையின் முக்கிய நோக்கமாகும் என சுவசெரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த சேவையில் விசேட பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அவசியமான மருந்துகள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
முதற்கட்டமாக இந்த திட்டம் முன்னோடிச் செயற்றிட்டமாக கொழும்பு உள்ளிட்ட அதிக வாகன நெரிசல் காணப்படும் நகர்ப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அவசர மருத்துவ உதவியை குறுகிய நேரத்தில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என சுவசெரிய அறக்கட்டளை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.








