இலங்கை -இந்தியா இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
மேலும் இந்திய – இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதில் முக்கியமானது, இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இதன் அடிப்படையில், இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான்.
ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள இராணுவம்.

யுத்தக் களத்தில் போராடிய தமிழ் இளைஞர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றதையும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைபிரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது.
இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும், இங்கிலாந்து பாராளுமன்றம் உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர்.
இனப்படுகொலை நடத்திய சிங்கள இராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகமாகும்.
தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.