நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.
இதன்படி, இன்று (08) காலை 9 மணி முதல் நாளை (09) காலை 9 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் மட்ட மண்சரிவு எச்சரிக்கை கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேசத்திற்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, நுவரெலியா, கொத்மலை கிழக்கு, நோர்வூட், அம்பகமுவ மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் மட்ட மண்சரிவு எச்சரிக்கை கண்டி மாவட்டத்தின் தெல்தொட்ட, உடுதும்பர, ஆற்று மேற்படுக்கை, உடபலாத, பன்வில, தொலுவ மற்றும் மெததும்பர பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹூப்பிட்டிய, அரநாயக்க, தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, ஓபநாயக்க மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கும் முதலாம் மட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், நிலைமை மோசமடையும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் ஊடாக சிலாபத்தில் இருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளுக்கும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (08) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (09) காலை 8.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினர் மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மட்டக்களப்பில் இருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், கொழும்பு மற்றும் காலி ஊடாக சிலாபத்தில் இருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது கொந்தளிப்பான நிலை காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








