முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக நேற்று (06) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை உடனடியாக உரியவர்கள் கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினர் மற்றும் கிராம மக்களை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் ”மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்“, “உழைத்து வாழப்பழகு ஊரை அழித்து வாழாதே“, “போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம்“, “போதையால் ஊரை அழிக்கிறாயே உன் சந்ததி மட்டும் நிலைத்து வாழுமா“, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்தனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள் அவர்களது வீட்டு வாசல்களில் பதாதைகளையும் காட்சிப்படுத்திவிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
