அரசியல் செயற்பாட்டாளரும், கொலன்னாவை நகரசபைக்கான இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளருமான டேன் பிரியசாத், பாதாள உலகத்தின் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத்துக்கும் மேல் மாகாணத்தில் இரண்டு பாதாள உலக கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே அதிகரித்து வந்த மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், டேன் பிரியசாத் சில காலத்திற்கு முன்பு பல பாதாள உலக நபர்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசியதற்காகப் பழிவாங்கும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, டேன் பிரியசாத்துக்கு குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே விசாரணைகள் இதனடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக கும்பல்களில் முக்கிய நபரான கஞ்சிபானி இம்ரானும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 22 ஆம் திகதி இரவு கொலன்னாவை லக்சித செவன வீட்டுத் தொகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சில மணி நேரங்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இறந்தார்.
வெல்லம்பிட்டி, சாலமுல்லவில் உள்ள லக்சித செவன வீட்டுத் தொகுதியின் 6ஆவது மாடியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு விருந்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் கலந்து கொண்டுள்ளார்.

அவர் தனது உறவினர்கள் மூவருடன் ஒரு மது விருந்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து, அவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அருகிலுள்ள சிசிரீவி காட்சிகளில், சந்தேக நபர்கள் படிக்கட்டுகளில் ஏறி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைவதையும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர்கள் தப்பிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும், பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளைத் தொடங்கினர்.

இருப்பினும், டேன் பிரியசாத் மூன்று பேருடன் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
அவருடன் மது அருந்திய இரண்டு பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் மேலும் அவர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த அவரது சகோதரரும், 2024 ஆம் ஆண்டு ஒருகொடவத்தை மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.