ஹெல்மெட் அணியாமல் குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோருக்கு எதிராக இனிமேல் போக்குவரத்து தலைமையகம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் என பாதை பாதுகாப்பு தொடர்பான போக்குவரத்து பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
“மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் பெரும்பாலான தாய்மார்களும் தந்தையர்களும் தாங்கள் மட்டும் ஹெல்மெட் அணிந்து கொண்டு, இரண்டு அல்லது மூன்று சிறு குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதை அடிக்கடி காண முடிகிறது.
தங்களுடைய குழந்தைகளை ஹெல்மெட் இல்லாமல் எந்தவித அச்சமோ தயக்கமோ இன்றி இவ்வாறு மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் செல்வது தவறான செயலாகும். மனிதாபிமான அடிப்படையில் இதுவரை பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.”
இனி அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பொலிஸ் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார் .







