இலங்கையின் போரின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
எனவே,இந்தப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகள் அவசரமாக அகற்றப்பட்டு மக்கள் வாழக்கூடிய இடங்களாக, அவை மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், 2028 ஜூன் 1 ஆம் திகதிக்குள் அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்ற வேண்டும் என்ற கடமைகளை நிறைவேற்ற, அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கண்ணிவெடியையும் அகற்றுவது மக்களின் நல்வாழ்விற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் இன்றியமையாதது என்றும், எனவே இந்த முயற்சியில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்தை நீக்குவது மட்டுமல்லாமல், மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
கொழும்பில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணிவெடி அகற்றும் செயல்பாட்டுத் திட்டத்தின் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.