மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை மிரட்டி 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் தலைமறைவாகிய நிலையில், கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று (7) நகர்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் உப பொலிஸ் பரிசோதகர் கடந்த முதலாம் திகதி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சிவில் உடையில் சென்று அதன் முதலாளிக்கு உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதனால் கொழும்பில் இருந்து தன்னை சென்று சோதனையிடுமாறு தெரிவித்து அறைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் சோதனையிட்டு அவர்களை மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் தருமாறு கோரிய நிலையில் தன்னிடம் இப்போது அந்த தொகை பணம் இல்லை எனவே 30 ஆயிரம் ரூபாதான் தற்போது உள்ளது என தெரிவித்த நிலையில் அதனை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக வாங்கி எடுத்துக் கொண்டார்.

குறித்த ஹோட்டலில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிய வீடியோ மற்றும் ஒலி வடிவங்களுடன் ஹோட்டல் உரிமையாளர் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரிடம் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பொலிஸ் உப பரிசோதகர் இதனையறிந்து உடனடியாக வாங்கிய 30 ஆயிரம் ரூபா பணத்தை அவருடன் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொடுத்து அனுப்பி ஹோட்டல் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் உதவி பொலிஸ் மா அதிபரிடம் ஹோட்டல் உரிமையாளர் பணத்தை திருப்பி தந்த விவகாரத்தை தெரிவித்ததையடுது, இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் இலஞ்சம் வாங்கிய குறித்த பொலிஸை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் அவர் கடமைக்கு வராது தலை மறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் குறித்த உபபொலிஸ் பரிசோதகரை பணியில் இருந்து நேற்று முன்தினம் (5) இடை நிறுத்தியுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நிலையில் தலை மறைவாகி வந்த குறித்த நபரை இன்று (07) நகர்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.