மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமச்சந்திராவின் நடவடிக்கையினால் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வன இலாகாவானது தமது எல்லைகளை வரையறை செய்யும் வேலைத் திட்டத்தை கடந்த மாதம் ஆரம்பித்த போது மாவட்ட விவசாயிகள் மற்றும் வன ஜீவிகள் திணைக்களம் ஆகியோருக்கிடையில் முரண்பாட்டு நிலையொன்று தோற்றம் பெற்றிருந்தது.
குறித்த பிரச்சினை தொடர்பில் சுமுகமான தீர்வுக்குச் செல்லும் வரை வன எல்லை நிர்ணயத்தை நிறுத்தும்படி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான அருண்ஹேமச்சந்திரா கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக வேலைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஒரு சில இடங்களில் வனஜீவிகள் திணைக்களம் வேலைகளை ஆரம்பிக்க முயற்சி செய்வதாக மாவட்ட விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலிப்குமாரிடம் முன் வைத்த கோரிக்கையானதுவெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பிற்பாடு மறு அறிவித்தல் வரும்வரை வன எல்லை நிர்ணய வேலைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கும்படி மாவட்ட அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண்ஹேமச்சந்திரா கடிதம் மூலம் பணித்துள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு எல்லைக் கற்கள் போடும் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது