மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை இன்று காலை (19) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் யோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 அக்டோபர் 12 ஆம் திகதி பிறந்தார்.
புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியிலமர்த்தப்பட்டார். இவர் பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.
மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.
2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.