நித்திய இளைப்பாறிய மட்டு- அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் இன்று (21) மாலை மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது.
சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்த 19 திகதி தனது 74 வது வயதில் ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்.

அவரின் திருவுடல் தன்னாமுனை தேவாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இரு தினங்களாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்றும் இன்றும் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிநேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அன்டன் ரஞ்சித். ஆண்டகையின் தலைமையில் இறுதி நாள்கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் இலங்கையின் மறை மாநிலங்களின் ஆயர்கள், சர்வ மதங்களின் குருமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மறைந்த ஓய்வு நிலை பேராயரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றன. அன்னாரின் ஆத்மீகப் பணிகள் மற்றும் பொதுப்பணிகள் தொடர்பில் அங்கு நடைபெற்ற இரங்கல் உரையின்போது பல்வேறுகருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் விசேட வழிபாடுகளுடன் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த ஓய்வு நிலை ஆயரின் திருவுடல் புனித மரியாள் பேராலயத்திற்குள் பீடப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்லறையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.








