முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளை விரைவில் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
கருத்து தெரிவித்த பாதுகாப்பு பிரதியமைச்சர், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தாலும், மக்களுக்குச் சொந்தமான காணிகளை மீள வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 2009 முதல் 2024 டிசம்பர் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மேலும் 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் இராணுவ முகாமின் எல்லையை மாற்றி மூன்று குடும்பங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்கும் கோரிக்கையும் சாதகமாக பரிசீலிக்கப்படும் என பிரதியமைச்சர் உறுதியளித்தார். அதேபோல், திருவிழாக் காலங்களில் முகாம் அமைந்துள்ள வீதியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கும் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், இயக்கச்சி பகுதியில் உள்ள காணி அடுத்த மூன்று மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

வட்டுவாகல் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்த பின்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்றும், கேப்பாபிலவில் முதற்கட்டமாக 6.5 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்தார். எஞ்சிய காணிகள் தொடர்பில் மாவட்ட மட்டக் குழுவொன்று அமைத்து ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.








