ஈரானுக்கு எதிராக மேலும் பாரிய இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராணுவத்திற்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட டிரம்ப், “நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் அவர்களால் இதைத் தாங்க முடியாது என்று அவர்கள் உணர்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி போர்க் குற்றங்களாகக் கருதப்படக்கூடும் என மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.







