கதிர்காமம் பொலிஸ் பிரிற்குட்பட்ட யால காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
சியம்பலாண்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் இணைந்து மேற்கொண்ட 05 சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், தனமல்வில மற்றும் தெனகம பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட 68,830 கஞ்சா செடிகள், 02 சட்ட விரோத உள்நாட்டுத்துப்பாக்கிகள், 02 கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் 02 சிம் அட்டைகள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.