அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கான தீர்வை வரியை தற்காலிகமாக அமுலில் வைத்திருக்க, அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கு டொனால்ட் ட்ரம்ப் பெருமளவிலான தீர்வை வரியை அண்மையில் அறிவித்தார்.
இதனை அடுத்து சர்வதேச ரீதியாக பொருளாதாரத்தில் பெரும் பாதக விளைவுகள் ஏற்பட்டன.
இந்தநிலையில் அமெரிக்காவின் மாநில நிர்வாகங்கள் சில, அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தன.

அதன் விளைவாக, குறித்த வரியை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இல்லை என்றும், அமெரிக்க காங்கிரஸுக்கே அந்த அதிகாரம் இருப்பதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்காலிகமாக குறித்த வரியை வசூலிப்பதற்கு அனுமதிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
எனினும் அடுத்த மாதம் வாதிகள் மற்றும் பிரதிவாதிகளான இருதரப்பும் தங்களது சமர்ப்பணங்களை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.