கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று (31) நண்பகல் சுமார் 11.00 மணியளவில், வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இடம்பெற்ற நிர்மாணப் பணிகளின் போது சுமார் 20 அடி உயரமுள்ள மண்மேடு திடீரென சரிந்து தொழிலாளி மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து, அருகிலிருந்த பிரதேசவாசிகளும் சக தொழிலாளர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, மண்ணுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதேச பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








