கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி என்ற கிறிஸ்தவ போதகர் அந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இவர் நேற்று (31) தனது மனைவி சஜினி உடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த 8-வயது மகன் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிங்ஸ்லி தனது மகனை வீட்டில் இருந்த ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சிறுவனின் உடல் முழுவதும் இரத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் இரத்த காயங்களுடன் பக்கத்து வீட்டில் அமர்ந்திருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.
இதனைப் பார்த்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து கருங்கல் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதன்பேரில், கருங்கல் பொலிசார் கிங்ஸ்லி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
