‘நான் இல்லையெனில் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்” என தொழில் அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவும் நிதியுதவியும் செய்தார்.
இதேவேளை கடந்த ஜனவரியில், ஜனாதிபதி ட்ரம்ப் பொறுப்பேற்றதும், அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறையை உருவாக்கினார். இதன் தலைவராக எலான் மஸ்க் இருந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், சமீபத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.
இந்நிலையில், ட்ரம்ப் அரசு சார்பில் புதிய செலவு மற்றும் வரி மசோதாவை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கும் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், எலான் மஸ்குக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில், ‘நமது வரவுசெலவுத்திட்டத்தில் , பில்லியன் கணக்கான டொலர்களில் பணத்தைச் சேமிப்பதற்கான எளிதான வழி, எலானின் நிறுவனத்துக்கான அரச மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்’ என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எலான் மஸ்குடனான பிரிவு ஏமாற்றம் அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்ரம்ப் மீது எலான் மஸ்க் கடும் விமர்சனத்தை முன் வைக்க தொடங்கினார்.

”நான் இல்லாமல் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆனால் ”நான் பென்சில்வேனியாவை வென்றிருப்பேன். நான் அதிக வித்தியாசத்தில் வென்றிருப்பேன்” என்று ட்ரம்ப் பதில் கொடுத்துள்ளார்.
நண்பர்களாக இருந்த எலான் மஸ்க், ட்ரம்ப் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளதால் இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.