தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அருகே இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் இதுவரை 69 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் 83 பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆரம்பத்தில் படகில் 133 பேர் பயணித்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இருப்பினும், மீட்கப்பட்ட சிலரின் பெயர்கள் பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், மொத்தம் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், படகின் ஓட்டுநரும் ஊழியர் ஒருவரும் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் கீழ் படகின் ஓட்டுநரும் சம்பந்தப்பட்ட ஊழியர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு சுமார் 11.01 மணியளவில் அவசர ஆபத்து சமிக்ஞை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் இருந்து உயிர் தப்பிய எலினா மூன்சாமி, “மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில நொடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்தது. மிதந்து வந்த மரப்பெட்டியைப் பற்றிக்கொண்டு உயிர் தப்பினேன். ஆனால், என் இரண்டு வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் கை நழுவி குழந்தையை இழந்தேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக அண்டை பிரெஞ்சு கயானாவில் இருந்து 12 அனுபவமிக்க உயிர்காப்பு பணியாளர்கள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், உள்ளூர் தனியார் மீன்பிடிப் படகுகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, கடலில் மிதந்துகொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியுள்ளன.
உயிருடன் மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








