மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் “அரச நிலங்களில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று நேற்று முன் தினம் (05) மட்டக்களப்பில் இடம் பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் இடம் பெற்ற செயலமர்வில் சிரேஸ்ட வழக்கறிஞர் கே.வி.எஸ். கனேசராஜன் வளவாளராக கலந்து கொண்ட வளவாண்மை மேற்கொண்டிருந்தார்.
தன்னாமுனை, மியானி மன்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற செயலமர்வில் கிராம அபிவிருத்தி சங்கங்கள் (RDS), மகளிர் அபிவிருத்தி சங்கங்கள் (WRDS) மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், குறிப்பாக நிலம் தொடர்பான பிரச்சினைகளை கொண்டுள்ள மக்கள் பங்கேற்றதுடன், மேலும் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் திருமதி தர்சினி சிறிகாந் உள்ளிட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் அரச காணிகள் தொடர்பாக அதிக பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு குறைந்து காணப்படுவதனால், சம காலத்தில் இவ்வாறான அரச காணிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகமாக பதிவாகிக்கொண்டிருப்பதை கருத்திற் கொண்டு அருவிப் பெண்கள் வலையமைப்பானது குறித்த விடையம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலேயே குறித்த ஆரம்பக்கட்ட விழிப்புணர்வு இச்செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது குடியிருப்பு தொடர்பான நிரந்தர ஆவணம், அரச மானியம், காணி சுவீகரிப்பு திட்டம், புதிய அரசாங்கங்கள் மாறும் போது காணி வழங்கும் திட்டங்கள், காணி அபிவிருத்திச் சட்டம் மற்றும் அரசகாணி தொடர்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் அவர்கள் எவ்வாறு சட்டத்தில் அவர்களுக்கான தீர்வை பெற்று கொள்வது போன்ற பல விடையங்கள் தொடர்பாக இதன்போது வளவாளரினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் பங்குபற்றிய பயனாளிகள் தமக்கான சட்டப் பாதுகாப்பை வளர்த்துக்கொள்ள இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்திருந்ததாக கருத்து தெரிவித்திருந்ததுடன், அருவி பெண்கள் வலையம்பானது தொடர்ச்சியாக சமூக சார்ந்த இது போன்ற விழிப்புணர்வு செயலமர்வுகளை நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




