பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் அரச பேருந்தில், மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் பகுதியிலிலுந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரசுக்கு சொந்தமான பேருந்தில் இவ்வாறான செயற்பாடுகள், பயணிகள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு ஊடாக பயணிக்கும் இந்த பேருந்தில் காத்தான்குடி பகுதியில் வைத்து தொடர்ச்சியாக அதிகளவான பொருட்கள் ஏற்றுவதன் காரணமாக அதில் பயணம் செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துவில் பகுதியிலிருந்து நீண்டதூர பயணமாக செல்வதன் காரணமாக அரச பஸ்கள் ஏற்கனவே மிக மோசமான நிலையில் இருக்கின்ற நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்று மாலை பொத்துவில் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த அரச பேருந்தின் பின் பகுதி கதவு மூடப்பட்டு அதற்குள் பெருமளவான பொருட்களை ஏற்றிச்செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது பொதுமக்கள் அதற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த பேருந்தின் நடத்துனர் அவற்றினை கவனத்தில் கொள்ளாது பொருட்களைக்கொண்டு கதவினை மூடியுள்ள நிலையில் அங்கிருந்த மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் விபத்து எதிலும் சிக்கினால் மக்கள் வெளியேறமுடியாதவாறு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் நடத்துனரிடம் கேள்வியெழுப்பியபோதிலும் அவர்களின் கருத்துகள் உள்வாங்கப்படவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான பயணத்தினை வழங்கவேண்டிய அரச பேருந்து இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி, மக்கள் தமது பயணங்களை அச்சமின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









