மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (07) நடைபெற்றது.
தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தவிசாளர் தமது கன்னி உரையின் போது வாகரை பணிச்சங்கேணியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் 06.07.2025 அன்று குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளமைக்கும் மன்முனைபற்று பிரதேச சபை தவிசாளர் உயிரிழந்துள்ளமைக்கும் சபையில் தமது மௌன அஞ்சலியைச் செலுத்தி, தமது கன்னி உரையை ஆரம்பித்தார்.

அவர் அங்கு சுட்டிக்காட்டுகையில்,
‘மக்கள் பணி நோக்கிய பயணத்தை இன்று ஆரம்பித்து, நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் செயற்பட வேண்டிய தேவைப்பாடு எம் மத்தியில் உள்ளது.
கடந்த பிரதேச சபை நிர்வாகமானது ஒரு அரசியல் பிடியில் அகப்பட்ட நிர்வாகமாகவே செயற்பட்டதாக நான் கருதுகின்றேன்.அந்த வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதன்போது சபையில் உறுப்பினர்கள் கன்னி உரையாற்றுவதற்கு தவிசாளரினால் சந்தர்ப்பம் வழஙகப்பட்டது. இதன்போது தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் செம்மனியில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வேண்டி மென அஞ்சலி செலுத்துமாறு சபையை கேட்டுக் கொண்டதற்கு இணங்க சபையில் கலந்து கொண்ட அனைவரும் எழும்பி நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் முக்கியஸ்த்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தங்கள் வட்டாரங்களில் நிலவும் குறை குறித்தும் உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.
இச்சபையினை சிறப்பாக வழி நடாத்துவதற்காக நிதிக்கொள்கை உருவாக்கம், வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி, வீதி புனரைப்பு, தொழில் நுட்ப குழு, முறைப்பாட்டுக் குழு, சுகாதார வாழ்வாதார வசதிகள் குழு, என்பவற்றுடன் 10 வட்டாரங்களில் உள்ளடக்கியதான புத்தி ஜீவிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு என மேற்படி விடயங்களை கையாள்வதற்காக சபை உறுப்பினர்களையும், குறித்த விடயம் தொடர்பான அறிவுள்ள வெளிநபர்களையும் உள்ளடக்கியதான தவிசாளரை தலைமையாகக் கொண்டு 06 குழுக்கள் அமைக்கப்பட்டன.

மாதாந்த சபைக் கூட்டமானது மாதக் கடைசியில் வரும் செவ்வாய் கிழமை அவ் நாட்களில் விடுமுறை நாளாக கருதினால் புதன் கிழமைகளில் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விசேட தொலைபேசி கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அலுவலகத்தில் அங்கிகரிக்க்பட்ட ஆளணியிலும் தற்போது குறைவான ஆளணியினரே காணப்படுகின்றனர். இதனை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளல் என்பனவுடன் கௌரவ தவிசாளர் தமது சொந்த சேவைக்கு சபை வாகனத்தை பயன்படுத்துவதில்லை என தெரிவித்ததுடன், கேள்விச்சபை உறுப்பினர்களின் நியமனத்தை அங்கீகரித்தல், தவிசாளர் பயன்படுத்தும் எரிபொருளுக்கான பெறுமதியை மதிப்பிட்டு அதற்கேற்ப தொகையினை தீர்மானித்து அடுத்த சபை அமர்வில் அங்கீகாரத்தினை பெறுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டது.
அதேசமயம் 19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் வாகரை பிரதேச சபையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு -07, இலங்கை தமிழரசு கட்சி-06, தேசிய மக்கள் சக்தி-03, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-02, ஜக்கிய மக்கள் சக்தி-01 என 19 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெறுகின்றனர்








