நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர்.
இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொள்கின்றனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறிப்பாக மேல் மாகாணத்தில் ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது.
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவற்றுக்கு தொற்றா நோய்கள் மற்றும் அதனையொட்டிய நோய்களே பிரதான காரணியாக உள்ளன. இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பிரதான மூலக் காரணி சீனியாகும். குறிப்பாக மது பாவனை பழக்கமுடையவர்களே இதில் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.
எவ்வாறிருப்பினும் தற்போது சிறிதளவும் மதுப் பழக்கம் அற்றவர்களிலும் இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதிகளவு சீனி எடுத்துக்கொள்வது இதயத்தில் கொழுப்பு படிவதற்கு காரணமாக அமைகிறது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனியை எடுத்துக்கொள்கின்றனர். உலகில் அதிகளவில் சீனி பயன்படுத்தும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.








