டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று (13) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, இந்த அறிவுறுத்தல் பாடசாலைகளுக்கு மட்டுமன்றி முன்பள்ளி கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்தார்.
குழந்தைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் முன், முழு உடலையும் பாதுகாக்கும் ஆடைகளை அணிவிப்பதுடன், தேவையெனில் குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான கொசு விரட்டிகளையும் பயன்படுத்துமாறு அவர் பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு அபாயம் தொடர்ந்தும் நிலவி வருவதாக குறிப்பிட்ட அவர், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமான காலப்பகுதியாக இருப்பதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.








