கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் குறித்து அறிவு பெற்ற மாணவர்களைப் பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் இந்த விழாவை ஏற்பாடு செய்கின்றன.
இம்முறை 11ஆவது தடவையாக நடைபெற்ற இவ்விழாவில், 192 சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து பதக்கங்களைப் பெற்றனர்.

மாணவர்களை சுற்றுச்சூழல் முன்னோடிகளாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
2025 சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவிற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு நினைவு மலர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
விழாவில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, சுற்றுச்சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளை உலகம் முழுவதும் எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.
மனித செயல்பாடுகளால் தற்போதைய தலைமுறை எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் அழிவை மாற்றி, அனைத்து உயிரினங்களுக்கும் சிறந்த சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் முக்கியமான Clean Sri Lanka வேலைத்திட்டம் தற்போது வலுவாகச் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இயற்கைக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான சமநிலையைப் பேணி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இலக்கு எனக் கூறிய அமைச்சர், எதிர்கால சந்ததியினருக்கு இன்றைய சூழலைவிட ஆரோக்கியமான, பசுமையான சூழலை வழங்குவதற்கு வலுவான முன்னோடிகளாகச் செயல்படுமாறு பதக்கம் வென்றவர்களைக் கேட்டுக்கொண்டார்.








