இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு சந்தேகநபர்களும் மீடியகொட மற்றும் பண்டாரகம பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்டவர்கள்.

மீடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலவென்ன வீதிப் பகுதியில் நேற்று முன்தினம் (01) நபரொருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக மேற்குறித்த இருவரில் ஒரு நபர் தலவாக்கலை சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்.
மேலும் ஒகஸ்ட் 21ஆம் திகதி பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொட பாலத்துக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் நேற்று (02) களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, ஹிரானவில் வசிக்கும் 23 வயதுடையவர் எனத் தெரிய வந்துள்ளது.








