மட்டக்களப்பில் சிறப்பு மிக்க தேவ ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய ஆண்டு திருப்பாத யாத்திரை இன்று (06) அதிகாலை பக்தி பரவசத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திருப்பாத யாத்திரை, புளியந்தீவு மரியாள் பேராலயத்தில் அதிகாலை 5.00 மணிக்கு நடைபெற்ற புனித திருப்பலியைத் தொடர்ந்து தொடங்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகங்கள் ஒழுங்கு செய்திருந்த இப்பெரும் மத நிகழ்வில், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 12,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று, பிரார்த்தனை பாடல்களும் ஜெபங்களும் முழங்க அயராது நடைபயணமாகச் சென்றனர்.

திருப்பாதப் பயணம் முழுவதும் பக்தர்கள் கையில் சிலுவைகள், மலர்கள், திருப்படங்கள் மற்றும் மரியாள் கொடிகள் ஏந்தியவாறு, பாடல் ஜெபங்களில் ஈடுபட்டு ஆன்மிக சூழலைக் கட்டியெழுப்பினர். யாத்திரை பாதையெங்கும் உள்ளூர் மக்கள் பக்தர்களுக்கு தண்ணீர், பானம், உணவு மற்றும் ஓய்வு இட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
நீண்ட நடைபயணத்திற்குப் பிறகு, யாத்திரை ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற இறுதி விழாவில் ஆலய பங்குத்தந்தை அருட்திரு ஜெரிஸ்டன் அடிகளார் தலைமையில் இறுதி ஆசீர்வாதம் வழங்கப்பட்டதன் மூலம் இம்முறை திருப்பாத யாத்திரை ஆன்மிக மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த யாத்திரை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரும் கத்தோலிக்க ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பக்தர்கள் பலர், குடும்பத்தோடு பங்கேற்று, தங்கள் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் அருளைப் பெறும் நோக்கத்துடன் ஜெபங்களைச் செய்தனர்.









