மட்டக்களப்பு நகரில் கண்ணகை அம்மன் ஆலய வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று வாடகை ஆட்டோ மூலம் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் (5) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஆட்டோவை, தினசரி ரூ.1,000 வாடகைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியிருந்தார். சம்பவ நாளில் குறித்த நபர், ஆட்டோவில் கண்ணகை அம்மன் ஆலயப் பகுதி சென்றபோது வீதியில் இருந்த ஆட்டை பிடித்து ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.
ஆட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திலிருந்த சிசி.டி.வி காட்சிகளை பரிசீலித்து ஆட்டோவின் இலக்கம் மூலம் உரிமையாளரை கண்டறிந்தனர். விசாரணையின் போது, ஆட்டோ உரிமையாளர் சம்பவத்தில் தாம் தொடர்பற்றவர் என்றும், வாடகைக்கு கொடுத்த ஆட்டோ இன்னும் திருப்பி வரவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் தேடுதல் நடவடிக்கையில், குறித்த ஆட்டோ காத்தான்குடி பள்ளிவாசல் அருகிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆட்டுடன் சென்ற திருடன் ஆட்டோவையும் அதன் ஆவணங்களையும் விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸார் ஆட்டோவை கைப்பற்றி, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.








