17ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு (21) அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது போட்டியில்பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் மொத்தம் 5 சிக்சர்கள் விளாசிய அபிஷேக் சர்மா 2 சிக்சர்கள் அடித்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்சர்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 50 சிக்சர்களை வெறும் 331 பந்துகளில் அடித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
- அபிஷேக் சர்மா – 331 பந்துகள்
- எவின் லூவிஸ் – 366 பந்துகள்
- ஆந்த்ரே ரசல் – 409 பந்துகள்
- ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாயி – 492 பந்துகள்
- சூர்யகுமார் யாதவ் – 510 பந்துகள்








