அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை மற்றும் கல்முனைக்குடி பகுதிகளில் இரண்டு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (05) இரவு இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெரிய நீலாவணை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 36 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது.
குறித்த நபர் வீ.சி. வீதியைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன்பும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், கல்முனைக்குடி 3ஆம் பிரிவு கடற்கரை வீதியில் உள்ள பள்ளிவாசல் அருகே 27 வயதுடைய இனிப்பு வியாபாரி போன்று நடமாடிய நபர் ஒருவரும் 1,800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி. சமந்த டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கமையவும், அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி. ரத்னவீர மற்றும் மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என். குலதுங்க ஆகியோரின் வழிகாட்டலின்படியும் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
கைதான இருவரும் விசாரணைகளுக்குப் பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்வுள்ளனர்.








